| ADDED : ஜூலை 04, 2024 03:34 AM
புதுச்சேரி, : 'நீட்' அல்லாத படிப்புகளான முதற்கட்ட இடஒதுக்கீடு வரைவு பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் 7,080 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி மாணவர்களுக்கு 3,212ம், மாணவிகளுக்கு 3,868 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் என்ஜீனியரிங் படிப்புகளுக்கு 3,011 இடங்களும், கலை அறிவியல் படிப்புகளுக்கு 3,496 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சபனைகள் இருந்தால் விண்ணப்பதாரர்கள் இன்று மதியம் 2:00 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்.இதைத்தொடர்ந்து இறுதிப்பட்டியல் நாளை காலை 11:00 மணிக்கு வெளியிடப்படும். இந்த முதல் சுற்று கலந்தாய்வில் இடம் கிடைக்க பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் அனைத்து சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட கல்லுாரிகளில் நாளை காலை 11 மணி முதல் வரும்12ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சேர வேண்டும். கல்விக் கட்டண விவரம் சென்டாக் இணையதளத்தை மாணவர்கள் பார்வையிட்டு தெரிந்துகொள்ளலாம். இதுகுறித்த தகவல்கள் மாணவர்களின் செல்போன் எண்களுக்கு குறுந்தகவல் மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.