| ADDED : ஜூலை 23, 2024 02:35 AM
புதுச்சேரி : லாஸ்பேட்டையில் சாலையில் திரிந்த கால்நடைகளை பிடித்த உழவர் கரை நகராட்சி ஊழியர்களை மிரட்டி அதன் உரிமை யாளர்கள் மீட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரியில் கால்நடை வளர்க்கும் சிலர், தங்களின் கால்நடைகளை மேய்ச்சலுக்காக சாலையில் திரிய விடுகின்றனர். அத்தகைய கால்நடைகள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுவதால், வாகன ஓட்டி களும், கால்நடைகளும் காயம் அடைகிறது.குறிப்பாக லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையில் ஏராளமான கால்நடைகள் திரிவதாக உழவர்கரை நகராட்சிக்கு புகார் சென்றது. உழவர்கரை நகராட்சியில் இருந்து தனி குழுவினர் சாலையில் திரியும் கால்நடைகளை பிடிக்க நேற்று லாஸ்பேட்டை வந்தனர்.பாக்கமுடையான்பட்டு அரசு பள்ளி அருகே சாலையில் திரிந்த 3 கால்நடைகளில் ஒன்றை வண்டிற்குள் ஏற்றினர். மற்ற இரு கால்நடைகளை வண்டியின் கம்பியில் கட்டி வைத்தனர்.இதை அறிந்த கால்நடைகளின் உரிமையாளர்கள், உழவர்கரை நகராட்சி ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்ததுடன், அங்கிருந்து செல்ல முடியாது என மிரட்டல் விடுத்தனர்.அதன்பின்பு, வண்டியில் இருந்த கால்நடைகளை உரிமையாளர்கள் மீட்டு சென்றனர். இது குறித்து உழவர்கரை நகராட்சிக்கு தகவல் தெரிவித்துவிட்டு, ஊழியர்கள் கலைந்து சென்றனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், மிரட்டல் விடுத்து கால்நடைகளை மீட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.