| ADDED : ஜூலை 28, 2024 07:07 AM
புதுச்சேரியில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், அரசு துறைகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் தாராளமாக கார்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன. இதற்காக புதிதாக கார் வாங்குவது, அதை இயக்குவதற்கு டிரைவரை நியமிப்பது போன்றவற்றுக்கு கணிசமான தொகை செலவாகிறது.இதன் காரணமாக, அதிகாரிகளுக்கு வாடகை கார்கள் அதிகளவில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், சொந்த கார்களை பயன்படுத்துவதை விட அதிகளவில் செலவாகும் என்பது தனிக் கதை.ஐந்து பேர் செல்லக் கூடிய சிறிய கார்களுக்கு மாத வாடகை ரூ. 45 ஆயிரம் முதல் 50 ஆயிரமும், 7 பேர் செல்லக் கூடிய பெரிய கார்களுக்கு மாதம் ரூ. 60 ஆயிரம் வரை அரசு சார்பில், வழங்கப்படுகிறது. மொத்தம் 600க்கும் மேற்பட்ட வாடகை கார்கள் அரசுக்காக இயக்கப்படுகிறது.ஒட்டுமொத்த வாடகை கார்களையும் இயக்குவதற்கு புதுச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. வாடகை கார்களில் ஜி.பி.எஸ்., கருவிகள் இல்லை. இதனால், எங்கு வேண்டுமானாலும் கார்களை இயக்கி கொள்ளலாம்.இதனை பயன்படுத்தி, பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் சிலர் தங்களின் சொந்த பயன்பாட்டிற்கு பல வாடகை கார்களை பயன்படுத்தி வருகின்றனர். ஒரே அதிகாரிக்கு 3 கார்கள் இயக்கப்படும் அவலமும் அரங்கேறி உள்ளது.அதிகாரியின் வீட்டு பயன்பாட்டிற்கு ஒரு கார், அலுவலக பயன்பாட்டிற்கு ஒன்று, சென்னையில் தங்கி படிக்கும் மகள் பயன்பாட்டிற்கு ஒரு கார் என, மொத்தம் 3 கார்கள் இயக்கப்படுகிறது.புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழ்நிலையில், அரசு சார்பில் இயக்கப்படும் ஒட்டுமொத்த வாடகை கார்களையும் தணிக்கை செய்து, யார் யாருக்கு கார் இயக்கப்படுகிறது என்ற பட்டியலை, அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.