| ADDED : ஆக 28, 2026 08:31 PM
புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிட சென்ற 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி அரசு ஊழியர்களின் சம்மேளன இணைப்பு சங்கங்களின் கூட்டு இயக்கத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள சுகாதாரத்துறையில் பணி புரியும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், பணி நிரந்தரம் மற்றும் நிலுவை சம்பளம் வழங்க கோரி நேற்று முன்தினம் தர்ணா போராட்டம் நடத்தினர். இரண்டாவது நாளாக, சம்பா கோவில் அருகே நேற்று மாலை 5:00 மணியளவில், போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சட்டசபையை முற்றுகையிட சென்றனர். அவர்களை, பெரியக்கடை போலீசார் பேரிக்கார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தொடர்ந்து, போராட்டம் நடத்தி வருவதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.