உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனைத்து ரேஷன் கார்டுக்கும் கூடுதலாக ரூ.250 வழங்க ஒப்புதல்! மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ.43 கோடி ஒதுக்கீடு

அனைத்து ரேஷன் கார்டுக்கும் கூடுதலாக ரூ.250 வழங்க ஒப்புதல்! மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ.43 கோடி ஒதுக்கீடு

புதுச்சேரி : பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 500 வழங்க உத்தரவிட்ட நிலையில் தற்போது கூடுதலாக ரூ. 250 வழங்க முதல்வர் ரங்கசாமி நேற்று உத்தரவிட்டுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடிமைப் பொருள் வழங்கல் நுகர்வோர் விவகாரங்கள் துறை மூலமாக வழங்கப்படும் 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரூ. 500 வங்கி கணக்கில் செலுத்த கவர்னர் ஒப்புதல் அளித்தார். அதை ஏற்று புதுச்சேரி காரைக்கால் மாகி ஏனாமில் உள்ள 3,38,761 ரேஷன் கார்டுகளுக்கு, தலா ரூ. 500 விதம் ரூ.16,93,80,500 வங்கி கணக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செலுத்தப்பட்டது. இந்த நிலையில், அனைத்து குடும்ப ரேஷன் கார்டுகளுக்கும் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதலாக ரூ. 250 வழங்க முதல்வர் ரங்கசாமி நேற்று உத்தரவிட்டார். இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த 3,38,761 ரேஷன் கார்டுகளுக்கு, கூடுதல் தொகை வழங்க ரூ. 8.47 கோடி ஒதுக்கப்பட்டது. இப்பணம் நேற்று முதல் வங்கி கணக்குகள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.இதுதவிர பொங்கல் பண்டிகையையொட்டி, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், இலவச வேட்டி சேலைக்கு பதிலாக, 18 வயது பூர்த்தியான அட்டவணை மற்றும் பழங்குடியினருக்கு தலா ரூ. 1000 வீதம் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் கணக்கிட்டு வங்கி கணக்கில் பணம் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அட்டவணை, பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், நெசவாளர்கள், மீனவர்கள் நீங்கலாக மீதமுள்ள 1,30,791 ரேஷன் கார்டுகளில், ஒரு நபர் ரேஷன் கார்டுக்கு ரூ. 500, இருவருக்கு மேல் உள்ள ரேஷன் கார்டுக்கு ரூ. 1000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

லேப்டாப்

புதுச்சேரியில் அரசு பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதற்கான கோப்புகள் தயாராயின. ஆனால் ஒப்புதல் கிடைக்காமல் கோப்புகள் சுற்றி வந்தன. இதனால் நேற்று பொங்கல் விழாவில் பங்கேற்க சென்ற முதல்வர் ரங்கசாமி லேப்டாப் வழங்குவதற்கான கோப்பில் கவர்னரிடம் விழா மேடையில் கொடுத்து கையெழுத்து பெற்றார். இதன் மூலம் புதுச்சேரி அரசு பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் 17,083 மாணவர்களுக்கு லேப்டாப் கிடைக்கும். இதற்காக அரசு ரூ. 43 கோடி ஒதுக்கி உள்ளது.

கையெழுத்தானது எப்படி

கவர்னர் மாளிகையில் பொங்கல் விழா நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது. விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை, அமைச்சர்கள் முதல்வர் வருகைக்காக காத்திருந்தனர். காலை 10:15 மணிக்கு முதல்வர் ரங்கசாமி கவர்னர் மாளிகை வந்தார். அப்போது கையோடு 2 கோப்புகளையும் கொண்டு வந்தார். நேற்று காலை 9:00 மணி முதல் காலை 10:30 மணி வரை நல்ல நேரம். 10:30 மணிக்கு மேல் ராகு காலம். அதனால் விழா பந்தலில் அமர்ந்த முதல்வர் ரங்கசாமி, தான் கொண்டு வந்த கோப்பை கவர்னரிடம் வழங்கி கையெழுத்திட தெரிவித்தார். கையெழுத்து போடுவதற்கு முன்பு நேரம் என்ன என கவர்னர் கேட்டார். அதற்கு சபாநாயகர் செல்வம், 10:27 என கூறினார். முதல்வரை பார்த்த கவர்னர் தமிழிசை, மணி 10:27 பரவாயில்லையா என கேட்டார். முதல்வர் ஒப்புதல் அளித்ததும் கவர்னர் தமிழிசை இரு கோப்புகளிலும் கையெழுத்து போட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை