செய்தி விளம்பர துறை சார்பில் சமூக ஊடக குழு உருவாக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், பல்கலைக்கழக, சமுதாய கல்லுாரியில், சமூக ஊடக குழு உருவாக்கப்பட்டது. பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றிய விவரங்கள், அரசு நிகழ்ச்சிகள் போன்றவைகளை சமூக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்ளும் வகையில், பல்கலைக்கழக, சமுதாய கல்லுாரியில் சமூக ஊடகக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஊடக குழுவை, அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில் விஷூவல் கம்யூனிகேஷன் பயிலும் மாணவர்கள் இணைந்து உருவாக்கப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சட்டசபையில், முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது. புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் ரஜனீஷ் புட்டானி, செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் முனுசாமி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில், பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் மொகமது அஷான் அபித், பேராசிரியர் விக்டர் ஆனந்தகுமார், சமுதாயக் கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் பங்கேற்றனர். ஐந்து மாணவர்கள் கொண்ட இக்குழு தலைமைச் செயலகத்தில் இருந்து செயல்படும். செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர், பேராசிரியர் கிருத்திகா ஆகியோர் இதன் நோடல் அதிகாரிகளாக செயல்படுவார்கள்.