| ADDED : செப் 11, 2026 07:52 PM
புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியின் தமிழ்த்துறை சார்பில் இரண்டு நாள்கள் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவின் நிறைவு விழா நடந்தது. மாணவி ஜெயஸ்ரீ வரவேற்றார். கல்லுாரி முதல்வர் மதிவாணன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறையின் தலைவர் சேதுபதி இலக்கிய விழாவின் சிறப்புகளை பட்டியலிட்டார். கல்லுாரி உள்தர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது வாழ்த்தி பேசினார். விழாவில் பாரதியாரின் எள்ளுப் பேரன் கவிஞர் நிரஞ்சன் பாரதி காணொலி வாயிலாக மாணவிகளுடன் கலந்துரையாடினார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வறிஞர் அரிமளம் பத்மநாபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கலை மற்றும் இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்குப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார். விழாவின் ஒரு பகுதியாக, மாணவியரால் தொகுக்கப்பட்ட நாட்டுப்புறப் பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள் அடங்கிய தொகுப்பு நுால்களும், ஆசிரியர் தினவிழாக் கவிதைத் தொகுப்பு நுாலும் வெளியிடப்பட்டன. மேலும், பாரதியின் நினைவு நாளை முன்னிட்டு அவருடைய நுால்கள் மற்றும் வரலாற்றுச் செய்திகள் அடங்கிய கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கலை, இலக்கியச் சித்திரங்கள், ஐவகை நிலங்களின் மாதிரிகள், மரபுசார் விளையாட்டுக்கருவிகள் மற்றும் மாணவியர் உருவாக்கிய கைவினைப் பொருள்கள் பொதுமக்கள் மற்றும் மாணவியரின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் வஜ்ரவேலு, ராஜலட்சுமி, சந்திரா ஆகியோர் செய்திருந்தனர். மாணவி மகேஸ்வரி நன்றி கூறினார்.