உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் மீண்டும் குப்பை; நகராட்சியை பின்பற்றி கொம்யூன் பஞ்சாயத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் மீண்டும் குப்பை; நகராட்சியை பின்பற்றி கொம்யூன் பஞ்சாயத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது, உழவர்கரை நகராட்சியை பின்பற்றி வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்தும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரும்பார்த்த புரம் புதிய புறவழிச்சாலையில் குப்பைகள், கட்டட இடிபாடுகள், செப்டிக் டேங்க் கழிவு கள், கோழிக் கழிவுகளை கொட்டி குப்பை மேடாக மாற்றி வந்தனர். இதனால், புறவழிச்சாலைக்கு அருகில் உள்ள வேல்ராம்பட்டு ஏரி தண்ணீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் எழுந்தது. இதனால், பொதுப்பணித்துறை மற்றும் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் இணைந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். புறவழிச்சாலையின் இரண்டு பக்கத்திலும் மலைபோல கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றி துாய்மைப்படுத்தினர். புறவழிச்சாலையில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு பலகையையும் வைத்தனர். இருந்தபோதும், இரவு நேரத்திலும், அதிகாலை நேரத்திலும், வாகன போக்குவரத்து குறைவாக இருக்கும் மற்ற நேரங்களிலும் திருட்டுத்தனமாக வாகனங்களில் சிலர் குப்பைகளை கொண்டு வந்து கொண்டினர். இதையடுத்து, புறவழிச்சாலையில், குப்பை கொட்டுபவர்களை படம் பிடித்து '75981 71674' என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பினால் ரூ.2,000 சன்மானம் வழங்கப்படும் என, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் அதிரடியாக அறிவித்தார். மேலும், புறவழிச்சாலையில் நுாறடி சாலை மேம்பாலம் அருகில் துவங்கி, உழவர்கரை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதி வரை குப்பைகளை கொட்டாமல் இருக்க, உழவர்கரை நகராட்சி உழியர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன், குப்பைகளை அகற்றி துாய்மை பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையின் ஒரு பகுதி வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்தின் கீழும் வருகிறது. இங்கு கொட்டப்படும் குப்பையை அகற்றாமலும், குப்பை கொட்டு வதை தடுக்க நடவடிக்கை எடுக்காமலும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இதனால், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புறவழிச்சாலை குப்பையும் கூளமுமாக உள்ளது. உழவர்கரை நகராட்சியை பின்பற்றி, வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்தும் புறவழிச் சாலையில் குப்பை கொட்டுபவர்கள் மீது அபராதத்துடன், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை