| ADDED : ஆக 20, 2024 01:30 AM
திருப்போரூர் : கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை, மேலக்கோட்டையூர் வழியாக, அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கல்லுாரி வாகனங்கள், கனரக வாகனங்கள், கார், பைக் என, நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.இந்த மேலைக்கோட்டையூர் பகுதியில், சர்ச் அருகே அபாயகரமான வளைவு பகுதி உள்ளது. மேலும், அங்கு பேருந்து நிறுத்தம் மற்றும் ஊருக்குள் செல்லும் உள்சாலைகள் பிரிந்து செல்கின்றன.இந்நிலையில், அங்கு வேகத்தடை அமைக்கப்படாததால், அதிவேகமாக வளைவு பகுதியை கடக்கும் வாகனங்கள், அவ்வப்போது விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுகின்றன.இதனால், வாகன ஓட்டிகள் பலர் அப்பகுதியை கடக்கும் போது அச்சமடைகின்றனர். சாலை வளைவு பகுதியில் வேகத்தடை அமைத்தால், வாகனங்களை வேகத்தை குறைத்து வருவதற்கு ஏதுவாக இருக்கும் எனவும், விபத்துகள் பெருமளவு குறையும் எனவும், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மேற்கண்ட சாலை வளைவு பகுதியில் வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.