| ADDED : ஏப் 30, 2024 10:32 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கம் கிராமத்தில், செங்கல்பட்டு மாவட்ட புதிய விளையாட்டு வளாகம் அமைக்க, 10 ஏக்கர் நிலத்தை, வருவாய்த் துறையினர், விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கீடு செய்தனர். அதன்பின், மாவட்ட விளையாட்டு வளாகம் கட்ட, 15 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. இங்கு, விளையாட்டு அரங்கம், உள் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், ஓடுதளம் ஆகியவை அமைகின்றன. இப்பணிக்கு தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் விடப்பட்டது.தொடர்ந்து, விளையாட்டு வளாகம் கட்டும் பணியை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, கட்டுமான பணிகளை, கடந்த மார்ச் 14ம் தேதி துவக்கி வைத்தார்.விளையாட்டு வளாகம் அமைய உள்ள பகுதியில், பொக்லைன் இயந்திரம் வாயிலாக, துாய்மை செய்யும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.இது குறித்து, விளையாட்டுத் துறை அதிகாரி ஒருவர், ”மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டுமானப் பணி துவங்கி நடந்து வருகிறது. 16 மாதங்களில் அனைத்து பணிகளையும் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்,” என்றார்.