உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வாலிபர் வெட்டி படுகொலை உறவினர்கள் சாலை மறியல்

வாலிபர் வெட்டி படுகொலை உறவினர்கள் சாலை மறியல்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி அடுத்த துஞ்சம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ், 38; டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி செல்வி, 30, என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு யுவராஜ் தன் வீட்டின் முன் உள்ள வராண்டாவில் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 11:30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், யுவராஜின் தலை, கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில், கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்தும், தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதை தொடர்ந்து, ஆத்திரமடைந்த நெம்மேலி மற்றும் துஞ்சம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம வாசிகள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என, நெம்மேலி பேருந்து நிறுத்தம் அருகே, மாமல்லபுரம் -- செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட கிராம வாசிகளிடம், செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் புகழ் பேச்சு டத்தினார். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ