தர்காஸ் - மருதேரி சாலை மோசம் வாகன ஓட்டிகள் அச்சம்
மறைமலை நகர்: ஜல்லி கற்கள் பெயர்ந்து படுமோசமான நிலையிலுள்ள, தர்காஸ் - மருதேரி சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கபெருமாள் கோவில் அடுத்த தர்காஸ் -- மருதேரி சாலை, 4 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை மருதேரி, கொண்டங்கி, கருநிலம், அனுமந்தபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன் படுத்தி வருகின்றனர். இந்த தடத்தில் பேருந்து வசதி இல்லாததால், இப்பகுதி மக்கள் பெரும்பாலும், இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த சாலை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளைக் கடந்த நிலையில், தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல இடங்களில், பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து படுமோசமான நிலையில் உள்ளதால், வாகனங்களின் டயர்களில் ஜல்லி கற்கள் குத்தி பஞ்சராகி விடுகின்றன. அத்துடன், பள்ளங்களில் தடுமாறும் வாகன ஓட்டிகள், சாலையில் விழுந்து காயமடைகின்றனர். இருபுறமும் வனப் பகுதி உள்ளதால், இரவில் இந்த பகுதியை அச்சத்துடன் கடக்க வேண்டியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.