கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து குழந்தை உட்பட மூவர் பலி
பள்ளிப்பட்டு: ஆந்திராவில் இருந்து பள்ளிப்பட்டு நோக்கி வந்த கார், பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், குழந்தை உட்பட மூவர் பலியாகினர். ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், கோவிந்தரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆறு பேர், 'கியா சோனட்' காரில், சித்துார் --- தச்சூர் ஆறு வழிச் சாலை மார்க்கமாக, பள்ளிப்பட்டு வந்து கொண்டிருந்தனர். திருமலைராஜபேட்டை அருகே வந்த போது, அங்கு சாலையின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில், கோவிந்தரெட்டிபள்ளியை சேர்ந்த பத்மா, 60, என்பவர், சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஓட்டுநர் விஸ்வநாதன், 50, ரேகா, 35, சிட்டம்மா, 52, கீர்த்தி, 26, கீர்த்தியின் ஒன்பது மாத குழந்தை சான்விக் என ஐந்து பேர், படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிப்பட்டு போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், ராணிப்பேட்டை சி.எம்.சி., மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் மற்றும் குழந்தை சான்விக் ஆகியோர் இறந்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.