உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கிளாம்பாக்கம் காலநிலை பூங்கா முழு நேரமும் திறக்க வலியுறுத்தல்

 கிளாம்பாக்கம் காலநிலை பூங்கா முழு நேரமும் திறக்க வலியுறுத்தல்

கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே உள்ள காலநிலை பூங்காவை, காலை 5:30 முதல் இரவு 10:00 மணி வரை திறக்க வேண்டும் என, பேருந்து பயணியர் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையோரம், 16 ஏக்கர் பரப்பில், 15.2 கோடி ரூபாயில் 'காலநிலை பூங்கா' உருவாக்கப்பட்டு, கடந்தாண்டு திறக்கப்பட்டது. இதில் அகழிகள், மழைநீர் குளங்கள், உயர்மட்ட நடைபாதை, மரத்தோட்டம், சிறுவர் விளையாட்டு பூங்கா, விளையாட்டு மைதானம், திறந்தவெளி அரங்கம் மற்றும் கண்காட்சி மேடைகள் என, பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. தவிர, 50 கார்கள் மற்றும் 500 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உடற்பயிற்சிக்கூடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பூங்காவை சுற்றிப் பார்க்கவும், வாகனங்கள் நிறுத்தவும் கட்டணம் இல்லை. தமிழர்களின் ஐந்து வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய இடங்களில் வளரக்கூடிய தாவரங்களும், இங்கே வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்கா தற்போது, காலை 5:30 மணி முதல் 9:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும், பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. இந்த கால அளவை, காலை 5:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை நீட்டிக்க வேண்டும் என, பேருந்து பயணியர் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புத்துணர்ச்சி பயணம் பேருந்து பயணியர் கூறியதாவது: வெளியூர் செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரும் போது, இந்த பூங்காவில் சிறிது நேரம் இளைப்பாறி, பின் பயணத்தை தொடரும் போது, மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. தவிர, குழந்தைகளுடன் வரும் இப்பகுதி மக்கள் பொழுதுபோக்கவும், காலநிலை பூங்கா சிறந்த இடமாக உள்ளது. புதர் காடுகள், கடலோர நிலப் பரப்பு, புல்வெளி, அழிந்துவரும் காடுகள், குன்றுகள் பற்றி இங்கு வைக்கப்பட்டுள்ள குறிப்புகள், சுவாரசியமாக உள்ளன. காலை 5:30க்கு திறந்து 9:00 மணிக்கு பூங்கா மூடப்படுகிறது. மீண்டும் மாலை 5:00 மணிக்கு திறந்து, 9:00 மணிக்கு மூடுவதால், இடைப்பட்ட நேரத்தில் கிளாம்பாக்கம் வரும் பயணியர், பேருந்து நிலையம் உள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டி உள்ளது. எனவே, காலை 5:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை, தொடர்ந்து பூங்கா திறந்திருந்தால், அனைத்து பயணியரும் பூங்காவில் இளைப்பாறி, புத்துணர்ச்சியுடன் பயணிக்க முடியும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை