| ADDED : ஜூன் 18, 2024 12:07 AM
மணலிபுதுநகர், மணலிபுதுநகர் அடுத்த விச்சூரில் உள்ள 'சிட்கோ' தொழிற்பேட்டை வளாகத்தில், பெரம்பூரைச் சேர்ந்த தனபால், 50, என்பவருக்கு சொந்தமான, 'ரூபி பெயின்ட், ஸ்ரீ முருகன் பெயின்ட்' நிறுவனங்கள் செயல்படுகின்றன.இங்கு, நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 120க்கும் மேற்பட்ட வீரர்கள், 150 அடி உயர ஸ்கை லிப்ட், ராட்சத குழாய் உள்ளிட்டவற்றால், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.ஆனால், ரசாயனம் உள்ளிட்ட பொருட்கள் உள்ளே இருந்ததால், தீ கொழுந்து விட்டெரிந்தது. இதனால், குபுகுபுவென கரும்புகை வெளியேறியது. ஒருவழியாக நேற்று காலை 7:00 மணியளவில் முற்றிலுமாக அணைக்கப்பட்டது.இந்த விபத்தில், இரண்டடுக்கு கொண்ட இரு கட்டடங்கள் மற்றும் பெயின்ட் மற்றும் மூலப்பொருட்கள் தீக்கிரையாயின.15 மணி நேரம் ருத்ர தாண்டவமாடிய தீயில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயிருக்கலாம் என, மணலிபுதுநகர் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.