சென்னை, சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகளை ஒருங்கிணைக்கும், 'ஏர் டிராபிக் கன்ட்ரோல்' அலுவலகமான, ஏ.டி.சி., டவர் உள்ளது.புறப்படும் விமானங்கள், தரையிறங்கும் விமானங்கள், தரையிறங்காமல் சென்னை வான் வெளியை கடந்து செல்லும் விமானங்கள் உட்பட அனைத்து விமான சேவைகளையும், ஏ.டி.சி., கண்காணிக்கும்.மிக முக்கியமான, பாதுகாக்கப்பட்ட இடமாகவும், சென்னை விமான நிலையத்தில் ஏ.டி.சி., டவர் உள்ளது. இது, 24 மணி நேரமும் இடைவிடாமல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும்.இந்நிலையில், இந்த ஏ.டி.சி., டவரின் நான்காவது தளம், மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதனால் அங்கு, பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த சென்னை விமான நிலைய தீயணைப்பு துறையினர் மூன்று வண்டிகளில் வந்து, 20 நிமிடங்களில் தீயை அணைத்தனர்.டவரின் மாடியில் உள்ள அறையில், பழைய கழிவு பொருட்கள் மற்றும் தேவை இல்லாத பொருட்களை போட்டு வைத்திருந்ததாகவும், அந்த அறையில் ஏற்பட்டுள்ள மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால், விமான கட்டுப்பாட்டு அறைக்கும், விமான சேவைக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இந்த சம்பவம் குறித்து, விமான நிலைய உயர் அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடக்கிறது.