| ADDED : ஜூன் 26, 2024 12:18 AM
தாம்பரம், சேலையூரில், பாதாள சாக்கடை பம்பிங் ஸ்டேஷன் கிணற்றில் மோட்டார் பழுதானதால், கழிவுநீரை அருகேயுள்ள ஏரி போக்கு கால்வாய் வழியாக வெளியேற்றிய மாநகராட்சி அதிகாரிகளின் செயல், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.தாம்பரம் மாநகராட்சியில், பல்லாவரம் மற்றும் தாம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. சேலையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீர், சேலையூர் பள்ளி வளாகத்தில், ஏரியை ஒட்டி கட்டப்பட்டுள்ள பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்லும். அங்கிருந்து, மேற்கு தாம்பரம் மண்ணுரான் குளத்தில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிப்பு மையத்திற்கு பம்ப் செய்யப்படும். இந்த நிலையில், சேலையூர் பம்பிங் ஸ்டேஷனில் இருந்து, நேற்று காலை பாதாள சாக்கடை கழிவுநீரை, அருகேயுள்ள சேலையூர் ஏரி போக்கு கால்வாயில் திறந்து விடப்பட்டது.மழைக்காலத்தில் ஏரி நிரம்பினால், கால்வாயில் தண்ணீர் எப்படி ஓடுமோ அதுபோல் பாதாள சாக்கடை கழிவுநீர் ஓடியது. துர்நாற்றம் அதிகமாக வீசியதால், கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டனர்.மாநகராட்சி நிர்வாகமே, ஏரி போக்கு கால்வாயில் பாதாள சாக்கடை கழிவை திறந்துவிட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பம்பிங் ஸ்டேஷனில், இரண்டு கிணறுகள் உள்ளன. ஒரு கிணற்றில் உள்ள மோட்டார் பழுதாகி விட்டது.'அதை எடுப்பதற்காக, கால்வாயில் திறந்துவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. பழுதை சரிசெய்த உடன், சிறிது நேரத்தில் நிறுத்தி விட்டோம்' என்றனர்.