சென்னை:மாநில அளவிலான வாலிபால் போட்டியில், பெண்களில் எஸ்.ஆர்.எம்., - ஆண்களில் வருமான வரித்துறை அணிகள் ஆதிக்கம் செலுத்தின.நெல்லை நண்பர்கள் கைப்பந்து கழகம் சார்பில், மறைந்த முன்னாள் நிர்வாகிகளான ஜான் மற்றும் சித்திரை பாண்டியன் நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி எழும்பூரில் நடக்கிறது.ஆண்கள் பிரிவில், ஐ.ஓ.பி. - 'இந்தியன் வங்கி, எஸ்.ஆர்.எம்., - வருமான வரி, கலால் வரி, தமிழக போலீஸ் உள்ளிட்ட எட்டு அணிகளும், பெண்கள் பிரிவில் ஐ.சி.எப்., - தெற்கு ரயில்வே உட்பட ஆறு அணிகளும் பங்கேற்றுள்ளன. நேற்று முன்தினம் மாலை நடந்த பெண்களுக்கான முதல் போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி, 25 - 22, 25 - 16 என்ற செட் கணக்கில் எஸ்.டி.ஏ.டி., அணியை தோற்கடித்தது. ஆண்களில் வருமான வரி அணி, 25 - 17, 25 - 23 என்ற செட் கணக்கில் எஸ்.டி.ஏ.டி., அணியையும், ஐ.ஓ.பி., அணி, 25 - 14, 25 - 22 என்ற செட் கணக்கில் தமிழக போலீஸ் அணியையும் வீழ்த்தின. மற்ற போட்டிகளில், டி.ஜி., வைஷ்ணவ அணி, 25 - 17, 25 - 20 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கி அணியையும், ஜி.எஸ்.டி., அணி, 19 - 25, 26 - 24, 25 - 23 என்ற செட் கணக்கில் எஸ்.ஆர்.எம்., அணியையும் தோற்கடித்தன. போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.