வில்லிவாக்கம்,:வில்லிவாக்கம் ரயில்வே சர்வீஸ் சாலையில், இரண்டு ஆண்டுகளாக அரைகுறையாக விடப்பட்ட சாலை பணியால், குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது.சென்னை, அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ரயில்வே சர்வீஸ் சாலை உள்ளது. மத்திய அரசின் ரயில்வேக்கு சொந்தமான இந்த சாலையின் ஒரு பகுதியில், வில்லிவாக்கம் சந்தை செயல்படுகிறது.இந்த சாலையை கடந்து, வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். அதேபோல், சந்தைக்கு தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் செல்கின்றனர்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை, குறைந்தபட்ச பராமரிப்பு கூட செய்யாமல், ரயில்வே அலட்சியமாக செயல்படுகிறது. குண்டும், குழியுமான இச்சாலையை ஆக்கிரமிப்புகளை காரணம் காட்டி, புதிய சாலை அமைக்காமல் அலட்சியமாக இருந்தது.இந்த சாலை குறித்து நம் நாளிதழில் பலமுறை சுட்டிக் காட்டிய பின், கடந்த 2022 ஆக., 5ம் தேதி, ரயில்வே சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.அதன் பின், புதிய சாலை அமைக்கும் பணிகளை, ரயில்வே துவங்கியது. அங்கு ஒரு பகுதியில் மட்டும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன.அதை முழுமையாக முடிக்காமல், அரைகுறையாக விடப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக அரைகுறையாக விடப்பட்ட பணிகளால், அவ்வழியாக செல்லும் பயணியர் மற்றும் பொதுமக்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். அதுமட்டுமின்றி, பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பாதி சாலையும், தற்போது பெயர்ந்து ஜல்லியாக சிதறிக் கிடக்கிறது.இதற்கிடையில், சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்த சில மணிநேர மழைக்கே, இந்த சர்வீஸ் சாலையில் வட்டம் வட்டமாக, குளம் போல் தண்ணீர் தேங்குகிறது.இதனால், அவ்வழியாக செல்வோர், பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, பருவமழைக்கு முன், அரைகுறையாக விடப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.