சென்னை, பொங்கல் பண்டிகையை ஒட்டி, கோயம்பேடு சந்தையில் 300 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்துள்ளது.பொங்கல் பண்டிகையை ஒட்டி, கோயம்பேடில் கடந்த 14ம்தேதி, பலவகை காய்கறிகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் 400க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வந்தன.பொங்கலின்போது பயன்படுத்தப்படும் பூசணிக்காய், மொச்சை, சேனைக்கிழங்கு, சிறுகிழங்கு, சர்க்கரைவள்ளி, மஞ்சள் கொத்து உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டின. விழுப்புரம், கடலுார், மதுரை, திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு எடுத்துவரப்பட்டது. ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்ச், வாழைப்பழம் விற்பனையும் களைகட்டியது. மல்லிகை பூ கிலோ 2,000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. ரோஜா, சாமந்தி, சம்பங்கி, மேரிகோல்டு, முல்லை உள்ளிட்ட பூக்கள் விற்பனை சூடுபறந்தது. இதனால், 15 மற்றும் 16ம் தேதிகளில் மட்டும் 300 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்தது. மளிகை சந்தையில் தனியாக 100 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்துள்ளது. காணும் பொங்கலை ஒட்டி, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு மட்டும் இன்று முழு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.