ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு தி.நகரைச் சேர்ந்த 4 பேர் கைது
சென்னை:ஆயிரம்விளக்கு, சபிமுகமது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர், 68. இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில் கூறப்பட்டிருந்ததாவது:எனக்கு சோழிங்கநல்லுார் தாலுகா, மடிப்பாக்கம் கிராமத்தில், 2,840 சதுர அடி நிலம் உள்ளது. அவற்றை சிலர், போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்து உள்ளனர். எனவே, தன் சொத்தை அபகரித்தவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.புகாரின் அடிப்படையில், நிலமோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இதில், தி.நகரைச் சேர்ந்த ராணி, 65, என்பவர், கிரையம் பெற்றது போல் போலி ஆவணம் பதிவு செய்ததுடன், அவரது மகன் ரமேஷ் குமாருக்கு செட்டில்மென்ட் ஆவணம் பதிவு செய்து கொடுத்தது போன்று, ஆவணம் தயாரித்துள்ளனர். பின் கந்தன்சாவடியைச் சேர்ந்த செல்வநாகராஜன் என்பவருக்கு, போலியாக பொது அதிகார பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளது தெரியவந்தது.இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட, தி.நகரைச் சேர்ந்த ராணி, 65, ரமேஷ்குமார், 40, செல்வநாகராஜன், 57, மற்றும் சங்கர், 36, ஆகிய நான்கு பேரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.