நடிகர்களின் அரசியல் அரிதாரம் நுால் வெளியீடு
சென்னை:சென்னை, நந்தனத்தில் நடந்துவரும் புத்தகக் காட்சியில், 'தினமலர்' அரங்கு எண்: 45ல், மூத்த பத்திரிகையாளர் நுாருல்லா எழுதியுள்ள, 'நடிகர்களின் அரசியல் அரிதாரம்' என்ற புத்தக வெளியீட்டு விழா, நடந்தது.இவ்விழாவில், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம், பிரைம் பவுண்டேஷன் தலைவர் சீனிவாசன், மணிமேகலை பிரசுர ஆசிரியர் குழு தலைவர் லேனா தமிழ்வாணன், எழுத்தாளர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.புத்தகம் குறித்து, சைதை துரைசாமி கூறுகையில், ''புத்தகத்தின் ஆசிரியர் நுாருல்லா, பன்முகத் தன்மை வாய்ந்தவர். பத்திரிகையாளராக தான் அறிந்த, வெளியே தெரியாத பல அரிய செய்திகளை இப்புத்தகத்தின் வாயிலாக வெளியே கொண்டு வந்துள்ளார்.திரைத்துறையை அறிவாயுதமாக பயன்படுத்தி, சமுதாய மாற்றத்திற்காக நடித்த ஒரே நடிகர் எம்.ஜி.ஆர்., மட்டுமே,'' என்றார்.லேனா தமிழ்வாணன் கூறியதாவது:திரைத்துறையில் இருந்து, அரசியலுக்குள் நுழைந்து வெற்றியைக் குவித்தவர் எம்.ஜி.ஆர்., மட்டுமே. அவர் பெற்ற வெற்றியை எவராலும் பெற முடியாது.இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் நுாருல்லா, எம்.ஜி.ஆர்., உடன் நெருங்கிப் பழகியவர். இதில், பல்வேறு அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள், லேசர் புள்ளியைப் போன்று நுணுக்கமாக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.