சென்னை: புதிய திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டும் வகையில், மறைமலை நகர், மணலி போன்ற திட்டங்களில், எஞ்சிய காலி மனைகளை ஏலம்விடும் பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், சென்னை பெருநகரில், 3,400 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு, சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்தது. இதனால், புதிதாக திட்டங்களுக்கு, நிதி திரட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்காக சி.எம்.டி.ஏ.,வின் பழைய திட்டங்களில், எஞ்சிய காலி மனைகளை விற்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. குறிப்பாக, மறைமலை நகர் துணை நகர திட்டத்தில் வரும் கூடலுார், சித்தாமனுார் தொழிற்பேட்டை, மணலி, மாதவரம் பேருந்து மற்றும் கன்டெய்னர் முனையம் ஆகியவற்றில் உள்ள காலி மனைகள், கடைகளை விற்கப்பட உள்ளன. இதற்காக, காலி மனைகள், கடைகளுக்கு விலை நிர்ணய பணிகள் முடிந்து, விற்பனை செய்யும் பணிகள் துவங்கியள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.