மேலும் செய்திகள்
பிப்., முதல் வாரம் வள்ளலார் மாநாடு
6 minutes ago
மனநலம் குன்றிய 31 பேருக்கு வேலைவாய்ப்பு
8 minutes ago
உண்ணாவிரதம்: 6வது பெண் துாய்மை பணியாளர்கள் அட்மிட்
11 minutes ago
சென்னை: நீதிமன்ற உத்தரவின்படி, கொளத்துாரில் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கச் சென்ற போலீசாருடன், ஆக்கிரமிப்பாளர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டோர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டு, ஆக்கிரமிப்பு நிலத்தின் ஒரு பகுதி மீட்கப்பட்டது. இதனிடையே, அரசுக்கு சொந்தமான 600 கோடி ரூபாய் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம், அரசு அதிகாரிகளே தனியாருக்கு தாரைவார்ப்பதாகவும், பகுதி மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
Galleryகொளத்துார், பாரத் ராஜிவ்காந்தி நகரில், 6.7 ஏக்கர் பரப்பளவு இடத்தில், 248 குடும்பத்தைச் சேர்ந்தோர், 40 ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். குறிப்பிட்ட இடம், உசேன் என்பவருக்கு சொந்தமானது எனக்கூறி, 2007ம் ஆண்டு முதல், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இவ்வழக்கு தொடர்பாக, 2023ம் ஆண்டு, உசேன் தரப்புக்கு சாதகமாக, குடியிருப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜூலை மாதம், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி நடந்தது. சமரச பேச்சு நடத்தி, நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன், முதுநிலை அமீனா சத்தியமூர்த்தி, கொளத்துார் தாசில்தார் அபர்ணா மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, போலீசாருக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்றவிடாமல் முரண்டு பிடித்தவர்களை, போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி, பாரத் ராஜிவ்காந்தி நகரில் இருந்து வெளியேற்றினர். இதனால், அப்பகுதி பரபரப்பானது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின், போலீஸ் பாதுகாப்புடன், நான்கு காலி மனைகளின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. மற்ற குடியிருப்பாளர்களுக்கு, பொருட்களை அகற்ற ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 'குறிப்பிட்ட இடம் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்டு உள்ளது. இந்த இடம் நீர்நிலை பகுதி. இதை மீட்க வேண்டும்' என, நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநர், மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: கொளத்துார் வட்டம், கொளத்துார் வருவாய் கிராமத்தில், இரண்டு புல எண்களில் உள்ள, 5.7 ஏக்கர் மற்றும் 4.7 ஏக்கர் நிலங்கள், நீர்நிலை பகுதியான ஏரி உள்வாய்க்கு சொந்தமானது. இந்த இடங்களுக்கு, நிலவரித்திட்ட அலுவலரின் செயல்முறை ஆணையை மட்டுமே வைத்து, இணையவழியில் பட்டா பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. செயல்முறை ஆணையே போலியாக உள்ளது. இதனால், செயல்முறை ஆணையின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறு, மாவட்ட கலெக்டருக்கு நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், 'அரசு ஆவணங்களை ஆராய்ந்து, அரசு நிலத்தை தவறாக பட்டா மாறுதல் செய்ய உத்தரவிட்டிருந்தால், அவற்றை ரத்து செய்ய வேண்டும்' என, தெளிவாக கூறப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு
இந்த 600 கோடி ரூபாய் மதிப்பிலான இடம், நீர்நிலைக்கானது; அரசுக்கு சொந்தமானது. நாங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் தான். அப்படி இருந்தாலும், அரசு நிலத்தை அரசு தான் மீட்க வேண்டும். மாறாக, சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிப்பதற்கு, அரசு அதிகாரிகளே துணை போவது எந்த வகையில் நியாயம். குறிப்பிட்ட இடத்தில் வசித்து வரும் 24 பேருக்கு, கொளத்துார் தாசில்தார் அபர்ணா, 2024 நவம்பரில் பட்டா வழங்கியுள்ளார். அதில், அரசு இடம் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பு இடம் என்றால், அவர் எப்படி பட்டா வழங்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின்படி, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், போலி ஆவணங்கள் வாயிலாக, அரசு நீர்நிலை இடம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிலவரி திட்ட அதிகாரிகள், உண்மைத்தன்மை குறித்து ஆராய கடிதம் எழுதியுள்ளனர். இது குறித்து, உயர் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வு காண்பது அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
6 minutes ago
8 minutes ago
11 minutes ago