| ADDED : பிப் 04, 2024 01:34 AM
சென்னை:மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள் கூறியதாவது:மெட்ரோ ரயில்களில் பயணியருக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சிற்றுந்துகள், ஷேர் ஆட்டோ, பேட்டரி ஆட்டோக்கள் போன்ற இணைப்பு வாகன வசதி படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. அதுபோல், மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வாட்ஸாப் செயலி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் டிக்கெட் எடுக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கிரெடிட், டெபிட் கார்டுகள், ஜிபே ஸ்கேனர் பயன்படுத்தி, டிஜிட்டல் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவுப் பகுதிகளில் உள்ள ஸ்கேனர்களில், இதற்கேற்ப தொழில்நுட்ப மாற்றம் செய்யப்படும். அதில், வங்கி அட்டைகளை காண்பித்து, புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம், சென்றடையும் மெட்ரோ ரயில் நிலையத்தை தேர்வு செய்து, அதற்கான கட்டணத்தை செலுத்தலாம். பயணத்திற்கான கட்டணம் மட்டும் பிடித்தம் செய்யப்படும். அதுபோல், ஜிபே முறையில், ஸ்கேனர் வாயிலாகவும் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம். புதிய வசதிக்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.