பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்க மீன் வடிவ தொட்டி அமைப்பு
பெசன்ட்நகர், கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில், பெசன்ட் நகர் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பையை சேகரிக்க, தன்னார்வ அமைப்பு சார்பில் மீன் வடிவ தொட்டிகள் அமைக்கப்பட்டன.பெசன்ட் நகர் கடற்கரையில், 1,000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம். பிளாஸ்டிக் குப்பையை கடற்கரையில் வீசி செல்வதால், அவை காற்றடித்து கடல் நீரில் சேர்கிறது. இதனால், மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.பிளாஸ்டிக் குப்பை கடலில் சேர்வதை தடுக்க, 'பண்டின்டோ' எனும் தனியார் அமைப்பு சார்பில், நேற்று கடற்கரையில் இரண்டு மீன் வடிவ தொட்டிகள் அமைக்கப்பட்டன.அவற்றை, சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மேலாண்மை இயக்குனர் சுமேஷ் சோமன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.பின் அவர் பேசியதாவது:கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதில், பொதுமக்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. கடற்கரை வரும் மக்கள், பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடங்களில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும்.குழந்தைகளை கவரும் வகையில், மீன் வடிவ தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை, இந்த தொட்டியில் போடும் பழக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.