டி.பி.,சத்திரம், அரசு உதவிபெறும் சிறப்பு பள்ளியின் அருகில், சாலையோரத்தில் தேங்கும் குப்பை மற்றும் திறந்தவெளி வடிகாலால், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நோய் தொற்றும் அபாயம் நிலவுகிறது.அண்ணா நகர் மண்டலத்தில், டி.பி.,சத்திரம் பகுதி உள்ளது. இப்பகுதியில் சேகரமாகும் குப்பையை சேகரிக்க, சாலையோரத்தில் இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.தினசரி குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்கள், குப்பையை எடுத்துவிட்டு, சாலையின் நடுவே தொட்டிகளை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.இதனால், விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. அதேபோல், சாலையில் சிதறியுள்ள குப்பையால் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:டி.பி.,சத்திரம், ஐந்தாவது தெருவில், மாநகராட்சியினர் முறையாக குப்பையை கையாளுவது கிடையாது. குப்பையை எடுத்து விட்டு, சாலையின் நடுவே நிறுத்தப்படும் தொட்டிகளால், இரு சக்கர வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி காயமடைகின்றனர்.அதேபோல், குப்பை கழிவுகளை சரிவர எடுக்காததால், சாலை முழுதும் சிதறி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தொட்டிகள் அருகில் செயல்படும் அரசு உதவிபெறும் சிறப்பு பள்ளியில், ஏராளமான மாற்றுத்திறனாளி குழந்தைகள் படிக்கின்றனர். சாலையில் தேங்கும் குப்பை மற்றும் அதன் அருகில் திறந்து கிடக்கும் மழைநீர் வடிகாலில் இருந்து, கடும் துர்நாற்றமும் வீசுகிறது.இதனால், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, நோய் தொற்றும் அபாயம் நிலவுகிறது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.