சென்னை, சென்னை, அம்பத்துாரில் ஜகத்குரு ஸ்ரீவேத காவ்ய வித்யா பவனம் என்ற அமைப்பு துவக்கப்பட்டது. இதன் நிறுவனர் சந்திரமவுலி ஸ்ரவுதிகள்.கடந்த, 2012ல் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள், இந்த பாடசாலைக்கு வருகை தந்து, பெரிய வளாகம் ஏற்பட ஆசி வழங்கினார்.அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த குருவாயல் கிராமத்தில் ஜகத்குரு ஸ்ரீவேத காவ்ய வித்யா பவனம் அமைப்பு, தற்போது பிரமாண்டமாக இயங்கி வருகிறது. இதன் சார்பில் ஸாம வேத பாடசாலையும், சாஸ்திர பாடசாலையும் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த பவனத்தில் ஸ்ரீ ஆதிசங்கரருக்கு கோவில் அமைக்க, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்கான பொறுப்பு, சென்னை ஸ்ரீ வித்யா தீர்த்த பவுண்டேஷனிடம் ஒப்படைக்கப்பட்டது.கடந்த, 2021 டிச., 2ம் தேதி சிருங்கேரி மடாதிபதிகளின் ஆசியோடு, நெரூர் ஸ்ரீ வித்யா நரசிம்ம ஆசிரமத்தை சார்ந்த ஸ்ரீ வித்யா சங்கர சரஸ்வதி சுவாமிகளால் அடிக்கல் நாட்டப்பட்டது. திருப்பணிகள் பூர்த்தியான நிலையில், நாளை காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.இந்த ஆலயத்திற்காக புதிய விக்ரஹம் ஒன்றை, சிருங்கேரி சாரதா பீடாதிபதிகளான பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள், விதுசேகர பாரதீ சுவாமிகள் ஆகியோர் பூஜித்து வழங்கிஉள்ளனர்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பூர்வாங்க பூஜைகள், யாகசாலையில் நேற்று துவங்கின. இன்று காலை 7:30 மணி முதல் பூஜைகள் நடக்கின்றன. நேரலையில் அயோத்தி கும்பாபிஷேக தினமான நாளை காலை 7:00 மணிக்கு மகா பூஜை நடக்கிறது. காலை 9:00 கலசத்திற்கு கும்பநீர் சேர்த்து கும்பாபிஷேகம் நடக்கிறது.கும்பாபிஷேகத்தில் முன்னாள் நீதிபதி ராமநாதன், வித்வான்கள் ஸ்ரீனிவாசன், ஸ்ரீராம் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர்.மதியம் 12:15 மணிக்கு ராமஜென்ம பூமி ராமர் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சி அயோத்தியில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதேபோல், குருவாயல் மக்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ வித்யாதீர்த்த பவுண்டேஷன் மற்றும் ஸ்ரீ வேத காவ்ய வித்யா பவனம் ஒருங்கிணைந்து செய்து வருகின்றன.