சென்னை: சென்னையில், புதிதாக போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், பழைய கம்பங்கள் அகற்றாமல் உள்ளன. இவை, போக்குவரத்து சிக்னலை மறைத்து, யார் செல்வதற்கு சிக்னல் விழுகிறது என்பது தெரியாமல், வாகன ஓட்டிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வசதியாக, 300 போக்குவரத்து சிக்னல்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த சிக்னல்கள், ரிமோட் வாயிலாக இயக்கப்படுகின்றன. தற்போது, சென்னை காவல் துறை, மாநகராட்சியுடன் இணைந்து, 500 கோடி ரூபாய் செலவில், 165 இடங்களில், வாகன போக்குவரத்திற்கேற்ப தானாகவே சிக்னல்களை மாற்றியமைத்து கொள்ளும் கட்டமைப்பை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 'சென்சார்' கேமரா உதவியுடன் இ யங்கும் சிக்னல்கள், போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப, தானாகவே சிக்னல்களை மாற்றியமைத்து கொள்ளும். இந்த சிக்னல் கம்பங்கள் பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளன. இவை, பழைய சிக்னல் கம்பங்களின் பின்பகுதியில் நடப்பட்டுள்ளன. பழைய கம்பங்களில் சிக்னல்களின் செயல்பாடு நிறுத்தப்பட்டு, புதிய கம்பங்களில் தான் போக்குவரத்து சிக்னல்கள் காண்பிக்கப் படுகின்றன.ஒருசில இடங்களில் மட்டுமே, புதிய கம்பங்களில் போக்குவரத்து சிக்னல் தெரிகிறது. அதேநேரம், பல புதிய கம்பங்களின் போக்குவரத்து சிக்னலை, பழைய கம்பங்கள் மறைத்து விடுகின்றன. குறிப்பாக, பச்சை விளக்கு எரிந்தாலும், வலது புறமா, இடது புறமா, நேராகவா என தெரியாமல், வாகன ஓட்டிகள் குழப்பத்தில் வாகனத்தை ஓட்டுகின்றனர். சிவப்பு விளக்கு எரிந்தாலும் இதே நிலை தான் காணப்படுகிறது. சில இடங்களில் யார் செல்வதற்கு சிக்னல் விழுந்துள்ளது என தெரியாமல், முந்திச்செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதால் விபத்து ஏற்படுகிறது. எனவே, புதிய கம்பங்களில் போக்குவரத்து சிக்னல்கள் தெளிவாக தெரியும் வகையில், பழைய கம்பங்களை அகற்ற வேண்டும். சோதனை அடிப்படையில் என்றால், புதிய கம்பங்களின் சிக்னல்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரியும்படி அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, சென்னை போக்குவ ரத்து போலீஸ் உயர் அதிகாரி கூறுகையில், 'புதிய கம்பங்களில் சோதனை ஓட்டம் நடப்பதால், பழைய கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன. புதிய கம்பங்களின் சிக்னல்கள் திருப்தியளிக்கும்பட்சத்தி ல், பழைய கம்பங்கள் விரைவில் அகற்றப்படும்' என்றார்.