| ADDED : ஜூலை 24, 2024 11:50 PM
சூலுார் : சூலுார் அருகே தொழிலாளர்கள் தங்கி இருந்த, 15 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின.சூலுார் அடுத்த கள்ளப் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னக்குயிலி கிராமத்தில், ராமசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஸ்பின்னிங் மில் கட்டுமானப்பணி நடக்கிறது. மில் வளாகத்தில், 15 குடிசை வீடுகள் உள்ளன. அதில் தங்கி, பீகார் மாநிலத்தை சேர்ந்த, 23 பேரும், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, ஏழு தொழிலாளர்களும் கட்டுமான வேலை செய்து வந்தனர். நேற்று காலை, அனைவரும் விறகு அடுப்பு மற்றும் காஸ் அடுப்பில், சமையல் செய்து வைத்து விட்டு, வேலைக்கு சென்றனர். மதியம், 1:30 மணி அளவில், ஒரு குடிசையில் திடீரென தீப்பற்றியது. தீ அருகில் இருந்த குடிசைகளுக்கும் வேகமாக பரவியது. ஒரு சிறிய சிலிண்டரும் வெடித்து சிதறியது. இதனால், குடிசைக்குள் இருந்த பொருட்கள், துணிகள் எரிந்து நாசமாகின. தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு சென்ற சூலுார் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு சென்றிருந்ததால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சூலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.