கோவை: கோவையிலிருந்து திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட 21 வழித்தடங்களில் புதிய பஸ்கள் இயங்கத் துவங்கின. கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்டில், 21 புதிய பஸ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது: இன்று(நேற்று) கோவை மண்டலத்துக்கு, 20 புறநகர் பஸ்களும், ஒரு டவுன் பஸ்சும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. ஊட்டி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் புதிய பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 7,200 புதிய பஸ்கள், வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன. இந்த வார இறுதிக்குள், 300 பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. முதல்வர் உத்தரவின்படி, அடுத்த வாரம் சென்னையில், தாழ்தள பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. கோவை நகரிலும் தாழ்தள பஸ்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு, அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக், மண்டல தலைவர் தெய்வானை, கல்விகுழு தலைவர் மாலதி, அரசு போக்குவரத்துகழக மேலாண் இயக்குனர் ஜோசப் டயஸ், பொது மேலாளர் ஸ்ரீதரன், பொது மேலாளர்(தொழில்நுட்பம்) செல்வக்குமார் பங்கேற்றனர்.