உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டு யானைகளால் 350 வாழை மரங்கள் சேதம்

காட்டு யானைகளால் 350 வாழை மரங்கள் சேதம்

தொண்டாமுத்தூர்;நரசீபுரத்தில், தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம், 350 வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றது.போளுவாம்பட்டி, மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், நாள்தோறும் காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை, பல முறை விவசாயிகள் மனு அளித்துள்ளனர். பல முறை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.இருப்பினும், வனத்துறையில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படாமல், குறைந்த பணியாளர்களே, காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், காட்டு யானைகளால், ஏற்படும் சேதங்களும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பட்டியார்கோவில்பதி பகுதியில் இருந்து, நேற்றுமுன்தினம் 4 காட்டு யானைகள், கூட்டமாக சின்னாற்றை கடந்து, நரசீபுரம், செங்கப்பள்ளம் பகுதிக்கு வந்தது.அங்கு, ஒரு வாழை தோட்டத்திற்குள் புகுந்த யானைக்கூட்டம், சுமார் 350 வாழை மரங்களை முற்றிலும் சேதப்படுத்தி, வாழை தண்டுகளை உண்டு சென்றுள்ளது. இதே தோட்டத்தில், கடந்த 4 நாட்களுக்கு முன்பும், காட்டு யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.

'ரொம்ப சங்கடமா இருக்கு'

விவசாயி செந்தில் கூறுகையில், ஓராண்டு வளர்த்து, 10 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில், 350க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. சுமார், 1.50 லட்சம் ரூபாய் நஷ்டமடைந்துள்ளது. கஷ்டப்பட்டு உற்பத்தி செய்த பொருளுக்கு, உரிய விலை கிடைக்காமல் போவதைவிட, அப்பொருள் மார்க்கெட்டிற்கு செல்லாமல் இப்படி சேதமடைவது, மனக்கவலையை ஏற்படுத்துகிறது. காட்டு யானைகளை தடுக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ