| ADDED : ஜூன் 11, 2024 01:03 AM
கோவை;கோவை அரசு மருத்துவமனையில் உள்ள, சி.டி., ஸ்கேன் மையத்தில் கூடுதல் ஆட்களை நியமிக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை அரசு மருத்துவமனையில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, போன்ற பகுதிகளில் இருந்து நோயாளிகள் வந்து செல்கின்றனர்.தினமும் வெளிநோயாளிகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், உள் நோயாளிகள், 3 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தற்போது அரசு மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன சிகிச்சைகள் அளிக்கும் விதமாக, புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், 5000க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக பல்வேறு முன்னேற்பாடுகளை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் பிரசவ வார்டில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் பெண்களின் உறவினர்கள் தங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்து தரப்படவில்லை எனவும், பிரசவ வார்டில் இருந்து சிறிது தொலைவில் தங்க அறிவுறுத்துவதால் உடனே கர்ப்பிணிகளை வந்து பார்க்க முடியவில்லை எனவும் மக்கள்குற்றம்சாட்டி வருகின்றனர்.அதனால் அவர்கள் தங்கள் பொருட்களை பிரசவ வார்டிற்கு முன் வைத்து விடுகின்றனர். இதனால் பிரசவ வார்டு சுகாதாரமற்று கிடக்கிறது.அதேபோல் எலும்பு முறிவு சிகிச்சைக்காகவும், பல்வேறு நோய் சிகிச்சைக்காகவும், சி.டி., ஸ்கேன் எடுக்க வருகின்ற நோயாளிகள், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர்.சி.டி., ஸ்கேன் மையங்களில் பணம் செலுத்தக்கூடிய இடத்தில், ஒரு நபர் மட்டுமே பணிபுரிவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அங்கு கூடுதல் ஆட்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.