உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மோப்ப நாயுடன் வனத்துறை சோதனை: சுற்றுலா பயணியருக்கு அறிவுரை

மோப்ப நாயுடன் வனத்துறை சோதனை: சுற்றுலா பயணியருக்கு அறிவுரை

ஆனைமலை:ஆனைமலை அருகே, வனத்துறை சோதனைச்சாவடியில், வன குற்ற சம்பவங்களை தடுக்க மோப்பநாய் கொண்டு வனத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.கள்ளச்சாராயம் அருந்தி, 60க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழக அரசு, போதை பொருட்கள் விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.அதில், திருப்பூர் மாவட்டம் மாவடப்பு பகுதியில் சாராயம் வாங்கி வந்து மஞ்சநாயக்கனுாரில் சிலர் குடித்த சம்பவம், மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே பகுதியில் இருவர் மதுவுடன் மாசடைந்த குடிநீர் கலந்து குடித்து தீவிர சிகிச்சையில் உள்ளனர்.இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் வனத்துறை வாயிலாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதில், ஆழியாறு சோதனைச்சாவடியில், துணை இயக்குனர் பார்கவதேஜா உத்தரவின் பேரில், பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபாலமுருகன் தலைமையில், வனத்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.வன குற்றங்களை கட்டுப்படுத்தவும், வனத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், வனத்துறை அதிகாரிகள், 'பைரவா' என்ற மோப்பநாய் வாயிலாக, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று மதியம் வனத்துறையினர் ஆழியாறு சோதனைச் சாவடியில் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து, போதைப்பொருட்கள், மது பாட்டில்கள் உள்ளதா என, ஆய்வு செய்து அனுமதித்தனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வாகன சோதனையில் மோப்பநாய் பயன்படுத்தப்படுகிறது. சட்ட விரோதமான பொருட்கள் எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டால், வனத்தில் உள்ள வனவிலங்குகளுக்கு பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி