உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நறுமண பயிர்கள் வாரியத்துடன் ஒப்பந்தம்  விரைவில் அமைகிறது இன்குபேஷன் சென்டர் 

நறுமண பயிர்கள் வாரியத்துடன் ஒப்பந்தம்  விரைவில் அமைகிறது இன்குபேஷன் சென்டர் 

கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், நறுமண பயிர்கள் சார்ந்த, ஸ்டார்ட் அப் திட்ட செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், மத்திய நறுமண பயிர்கள் வாரியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பல்கலையில், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் வகையில் தொழில்நுட்ப வணிக காப்பகம் ( இன்குபேசன் சென்டர்) வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இம்மையம் வாயிலாக, மத்திய, மாநில அரசின் பல்வேறு தொழில் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன், தொழில் துவங்க பயிற்சி அளித்தல், இயந்திர பயன்பாடு உதவி, பிராண்டிங், பேக்கிங், சந்தைப்படுத்துதல், காப்புரிமை பெறுதல், மானியங்கள், கடன் உதவி என பல்வேறு செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், நறுமண பயிர்கள் வாரியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் வாயிலாக, மேலும் ஓர் தொழில்நுட்ப வணிக காப்பகம் பல்கலையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழகத்தில் ஸ்டாட் அப் நிறுவனங்கள் மேலும் அதிகரிக்க உதவும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

'ஒப்பந்தம் கையெழுத்து'

இதுகுறித்து, வேளாண் பல்கலை தொழில்நுட்ப வணிக காப்பக இயக்குனர் ஞானசம்பந்தம் கூறுகையில், '' தமிழ்நாடு வேளாண் பல்கலையில், தற்போதுள்ள தொழில்நுட்ப வணிக காப்பகத்தில், 560 உறுப்பினர்கள் உள்ளனர். அரசு திட்டங்களின் கீழ், பலருக்கு 100 சதவீத மானியங்கள் வழங்கியுள்ளோம். தற்போது, மத்திய நறுமண பயிர் வாரியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம். இதன் வாயிலாக, புதிய ஸ்டார்ட் அப் நறுமண பயிர்கள் சார்ந்து உருவாக வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இரண்டு மாதங்களில், இத்திட்டம் செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்