| ADDED : மே 30, 2024 05:05 AM
கோவை : ராம்நகர் அருகே அன்சாரி வீதியில் நடந்துவரும் பாதாள சாக்கடை பணிகளுக்கு இடையே, குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.மாநகராட்சி, 67வது வார்டு ராம் நகர், அன்சாரி வீதி உள்ளிட்ட இடங்களில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. குடியிருப்புகள் மிகுந்த இப்பகுதிகளில், ரோட்டின் நடுவே குழாய் பதித்து 'சேம்பர்' உடன் இணைக்கும் விதமாக, குழி தோண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், அன்சாரி வீதியில் குழி தோண்டும் பணியின்போது குடியிருப்புகளுக்கு இடையே செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது. குளம் போல் தேங்கியுள்ள இக்குடிநீரால், பாதாள சாக்கடை பணிகளில் தொய்வும் ஏற்படும் நிலை உள்ளது.எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுப்பதுடன், தரமான பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.