கோவை;கோவை விழா, 17வது பதிப்புக்கான லோகோ வெளியிடப்பட்டது.நவ., 23ம் தேதி துவங்கி டிச., 1ம் தேதி வரை விழா நடத்தப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர், கலெக்டர் அலுவலக அரங்கில் லோகோவை வெளியிட்டு தேதியை அறிவித்தனர். நிகழ்ச்சியில், கோவை விழாவின் தலைவர் அருண் செந்தில்நாதன், இணைத் தலைவர் சவுமியா காயத்ரி ஆகியோர் கூறியதாவது:இந்த ஆண்டு நடைபெறவுள்ள, 17வது கோவை விழாவில், நகரம் முழுவதும் ஒன்பது நாட்கள், பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற உள்ளன.டபுள் டெக்கர் பஸ், மியூசிக் கச்சேரி, ஆர்ட் ஸ்ட்ரீட், மராத்தான், விளையாட்டு நடவடிக்கைகள், 'கிராஸ்ரூட் மோட்டார்ஸ்போர்ட், குதிரை பந்தயம் நிகழ்வுகள், உணவு திருவிழா என, 200க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.ஒவ்வொரு நிகழ்வும், கோவை மக்களின் தனித்துவமான திறமைகளையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு, கோவை விழா விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது சமூகத்தில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி, நமது நகரத்திற்கு பெருமை சேர்த்த கோவை மக்களை அங்கீகரிப்பதை, நோக்கமாகக் கொண்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.