| ADDED : ஜூலை 09, 2024 12:32 AM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, நாராயணநாயக்கன்புதூர் பகுதியில் ரோடு சேதம் அடைந்துள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு, பெரியகளந்தை ஊராட்சிக்கு உட்பட்ட நாராயணநாயக்கன்புதூர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள ரோடு, இரண்டு கி.மீ., துாரத்துக்கு சேதம் அடைந்து உள்ளது. இதனால் வாகனங்களில் செல்லவும், நடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்த ரோட்டில் விளைபொருட்களை எடுத்து செல்ல முடியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர். மேலும், அவசர தேவைக்கு மருத்துவமனை செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.மக்கள் கூறுகையில், 'இந்த ரோடு அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. தற்போது உருக்குலைந்து காணப்படுவதால், வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது.ரோட்டை சீரமைக்க வேண்டும் என, கிராம சபை கூட்டத்தில் தெரிவித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. மக்கள் நலன் கருதி இந்த ரோட்டை ஊராட்சி நிர்வாகத்தினர் விரைவில் சீரமைக்க வேண்டும்' என்றனர்.