கோவை:கோவையில், உக்கடம் - ஆத்துப்பாலம் வரை கட்டியுள்ள மேம்பாலத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமென, 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. அதன்படி, மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, தற்போது மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில், கோவை உக்கடம் முதல் கரும்புக்கடை வரை மட்டும் மேம்பாலம் கட்டுவதற்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இவ்வாறு மேம்பாலம் கட்டினால் மக்களுக்கு பயனிருக்காது; இடைப்பட்ட பகுதியில் உள்ள 'டோல்கேட்'டை அகற்றி, ஆத்துப்பாலம் வரை நீட்டிக்க வேண்டும்.பொள்ளாச்சி ரோடு மற்றும் பாலக்காடு ரோட்டில் இருந்து வருவோர் பயன்பெறும் வகையிலும், சுங்கம் பகுதியில் இருந்து வருவோர் பயன்படுத்தும் வகையிலும், மேம்பால வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என, 2018, மார்ச் 26 'தினமலர்'நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.அதைப்படித்த, அப்போதைய முதல்வர் பழனிசாமி, திட்ட அடிக்கல் நாட்டு விழாவில், 'உக்கடம் மேம்பாலம் வடிவமைப்பு மாற்றப்படும்' என, உறுதியளித்தார். அதன்படி, டிசைன் தயாரிக்கப்பட்டு, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், இத்திட்டப்பணி வேகப்படுத்தப்பட்டது. நிலம் கையகப்படுத்துவது; ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவது; வீடுகளை அகற்றி மாற்றிடம் வழங்குவது; வக்பு வாரிய இடங்களை வகை மாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்ட போதிலும், போக்குவரத்து நெருக்கடிகளுக்கு இடையே இவ்வேலைகளை செய்து, மேம்பாலம் கட்டுமான பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் தற்போது முடிந்திருக்கின்றனர். சுங்கம் செல்வதற்கு, வாலாங்குளம் பைபாசில் இறங்கு தளம் மற்றும் ஆத்துப்பாலம் சந்திப்பை மேம்படுத்தும் பணி நிலுவையில் உள்ளன. இவ்விரு பணிகளையும் தாமதிக்காமல் முடிக்க, அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.இப்பாலம், 481.95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது; கோவையில் நேற்று நடந்த விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின், அப்பாலத்தில் காரில் அவர் பயணித்தார்.