பொள்ளாச்சி : திருமூர்த்தி அணையில் இருந்து, பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், கால்வாய்களை துார்வாரவும், கண்காணிப்பு பணிகளை துவக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பி.ஏ.பி., பாசன திட்டம், கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்குகிறது. இத்திட்டத்தில் வழங்கப்படும் தண்ணீரை கொண்டு, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் திருமூர்த்தி அணையிலும், ஆழியாறு அணையில், 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறுகின்றன.சோலையாறு, பரம்பிக்குளம், துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகளில் இருந்து, சர்க்கார்பதிக்கு கொண்டு வரப்படும் தண்ணீர், மின் உற்பத்திக்கு பின், காண்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு செல்கிறது.திருமூர்த்தி அணையில் இருப்பு வைக்கப்படும் தண்ணீர், 124 கி.மீ., துாரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள பிரதான கால்வாய் வழியாக வினியோகிக்கப்படுகிறது. இந்த கால்வாயிலிருந்து, 1,012 கி.மீ., துாரம் உள்ள கிளை கால்வாய் வழியாக சென்று, பகிர்மான கால்வாய் வழியாக பாசனம் நிலங்களுக்கு சென்றடைகிறது.ஆண்டுதோறும் பாசன கால்வாய்கள் முழு அளவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. புதர்கள் மண்டி கால்வாய் உள்ள பகுதியே தெரியாத அளவுக்கு மாறியுள்ளன.அதிலும், வடசித்துார் பிரதான கால்வாய்கள் முழுவதுமாக துார்வாரப்படாமல் புதர் மண்டி காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ஆக., 19ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கடைமடை வரை கால்வாய்களை துார்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். துார்வாரணும்
விவசாயிகள் கூறியதாவது: கால்வாய்கள் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் சேதமடைந்துள்ளன. மேலும், கால்வாய்கள் ஓரத்தில் வளர்ந்துள்ள மரங்களின் வேர்கள், கால்வாயை சேதப்படுத்துகின்றன. இதுபோன்ற பிரச்னைகளால், கால்வாயில் முழு அளவில் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.முட்புதர்கள் வளர்ந்துள்ளதால், குழாய்கள் அமைத்து தண்ணீர் திருடவும் வாய்ப்புள்ளது. எனவே, பிரதான, கிளை கால்வாய்களை முழுமையாக பராமரிக்கவும், துார்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது, தண்ணீர் திறக்க தேதி முடிவு செய்துள்ள நிலையில், உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் முன்வர வேண்டும். இம்முறை தண்ணீர் திருட்டை தடுக்க, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
கூட்டுக்குழு வாயிலாக கண்காணிப்பு!
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்களை துறை ரீதியாகவும், பாசன சங்கத்துக்கு உட்பட்ட கால்வாய்களை தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழும் துார்வார நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தண்ணீர் திறப்புக்கு முன் துார்வார நடவடிக்கை எடுக்கப்படும்.பிரதான கால்வாய் மற்றும் கிளை கால்வாய்களில் நீர் திருட்டை தடுக்க கூட்டு கண்காணிப்பு குழு வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், திட்டக்கால்வாய்களின் அருகில் உள்ள, திறந்தவெளி மற்றும் ஆழ்குழாய் கிணற்றில் கிடைமட்ட போர்வெல் (சைடு போர்) அமைத்தும், இதர வகை நீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீதும், மின் இணைப்பு துண்டிப்பு, அரசு மானியங்கள் அனைத்தும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவர்,' என்றனர்.