| ADDED : ஜூலை 27, 2024 02:03 AM
சூலூர்:சுல்தான்பேட்டை அருகே பால் வியாபாரியை கொலை செய்த கட்டட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.சுல்தான்பேட்டை அடுத்த ஓடக்கல்பாளையத்தை சேர்ந்த பால் வியாபாரி பரமசிவம், 28, கடந்த 22 ம்தேதி காட்டுப்பகுதியில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணி நடந்தது. உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், பரமசிவத்தின் நண்பரான வரதராஜ் தலைமறைவாக உள்ளது தெரிந்தது. அவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை வரதராஜ் தனது வீட்டுக்கு வந்திருப்பது அறிந்த, இன்ஸ்பெக்டர் மாதையன், எஸ்.ஐ., முத்துக்கிருஷ்ணன், எஸ்.எஸ்.ஐ., சரவணன், ஏட்டு சனீஸ்வர குமார் ஆகியோர் அங்கு சென்று வரதராஜை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், நண்பர்களான இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம் என்றும், சம்பவத்தன்று காட்டுப்பகுதியில் மது குடித்ததும், அப்போது, பரமசிவம், வரதராஜ் மற்றும் அவரது குடும்ப பெண்களை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரமைடைந்து, பரமசிவத்தை கொலை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குற்றவாளியை விரைந்து கைது செய்த போலீசாருக்கு, கோவை சரக டி.ஐ.ஜி., பாராட்டு தெரிவித்தார்.