| ADDED : ஜூலை 30, 2024 01:22 AM
வால்பாறை;வால்பாறையில், யானை வழித்தடங்களை கண்டறிந்து அங்குள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும், என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், அதிகளவில் யானைகள் உள்ளன. ஆண்டாண்டு காலமாக யானைகள் செல்லும் பாதையை மறித்து தேயிலை, காபி, ஏலம், மிளகு உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன.சமீப காலமாக, யானை வழித்தடத்தில் சொகுசு விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், யானைகள் வழித்தடத்தை மீட்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.மனுவை விசாரித்த நீதிபதிகள், கோவை மாவட்ட வனப்பகுதியில் யானைகள் வழித்தடம் அதிக அளவில் உள்ளன. வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், யானை திசை மாறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. எனவே, யானைகள் வழித்தடத்தை கண்டறிந்து மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், வால்பாறையிலும் யானைகள் வழித்தடத்தை கண்டறிந்து, மீட்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.