| ADDED : ஜூலை 24, 2024 08:33 PM
வால்பாறை : வால்பாறை நகரில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகர் பகுதி ஒரு கி.மீ., சுற்றளவில் அமைந்துள்ளது. பொள்ளாச்சி ரோட்டில், அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.இந்நிலையில், வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை, ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் உள்ளன.மேலும், ரோட்டில் சுற்றுலா வாகனங்களும் அதிகளவில் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, மக்கள் ரோட்டில் நிம்மதியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரில், அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. இதனால், பல்வேறு எஸ்டேட் பகுதியில் இருந்தும் மக்கள் வால்பாறை நகருக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், ரோட்டை ஆக்கிரமித்து அதிகளவில் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ரோட்டை ஆக்கிரமித்துள்ள கடைகளை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். வால்பாறை மார்க்கெட் ரோட்டை ஆக்கிரமித்துள்ள கடைகளையும் நகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும்.இவ்வாறு, கூறினர்.