மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் நடந்த, நான்கு ஊராட்சிகளுக்கான, மக்களுடன் முதல்வர் முகாமில், 1,200க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் குவிந்தன. காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. இதில் இரண்டாவது கட்டமாக, ஓடந்துறை, நெல்லித்துறை, தேக்கம்பட்டி, சிக்கதாசம்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு, மக்களுடன் முதல்வர் முகாம், மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. கோவை மாவட்ட துணை கலெக்டர் நிறைமதி, முகாமை துவக்கி வைத்தார். மேட்டுப்பாளையம் தாசில்தார் வாசுதேவன், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேல், தேக்கம்பட்டி தலைவர் நித்தியா நந்தகுமார், நெல்லித்துறை தலைவர் செல்வி, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தலைவர் விமலா உள்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றன. முகாமில், 15 அரசு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். மொத்தம், 1,200க்கும் மேற்பட்ட மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதில் உரிமைத் தொகை கேட்டும், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, தொகுப்பு வீடுகளை பழுது நீக்கம் செய்ய வேண்டுதல் ஆகிய கோரிக்கை மனுக்களை, பொதுமக்கள் அதிகளவில் கொடுத்திருந்தனர்.