உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பில்லூர் நீர்மட்டம் சரிவு; பரளிக்காடு சூழல் சுற்றுலா முடங்கும் அபாயம்

பில்லூர் நீர்மட்டம் சரிவு; பரளிக்காடு சூழல் சுற்றுலா முடங்கும் அபாயம்

மேட்டுப்பாளையம்;வறட்சியால் வறண்டு வரும் பில்லூர் அணையால், பரளிக்காடு சூழல் சுற்றுலா முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது.கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பரளிக்காடு, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. காரமடை வனத்துறை சார்பில் பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், பழங்குடியின மக்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.பரளிக்காடு சூழல் சுற்றுலா பயணிகளுக்கு பில்லூர் அணையில் பரிசல் பயணம், பழங்குடியின மக்கள் சார்பில் வழங்கப்படும் 10க்கும் மேற்பட்ட உணவு வகைகள், ஆற்றில் குளியல் என வனத்துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர். இதனை நம்பி பரளிக்காடு, பூச்சமரத்தூர், பில்லூர், நீராடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட பரிசல் ஒட்டுநர்கள், 12க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் ஏராளமான பழங்குடியின மக்கள் உள்ளனர்.இந்நிலையில் தற்போது கடும் வெயில் காரணமாகவும், மழையில்லாத காரணத்தினாலும் பில்லூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் அணையில் பரிசல் பயணம் தொடர முடியாத நிலை ஏற்படும்.பரிசல் பயணம் ரத்து செய்யப்படும் பட்சத்தில் பரளிக்காடு சூழல் சுற்றுலா முடங்கும் நிலை ஏற்படும். இதனால் பழங்குடியினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், தற்போது வரை பரிசல் இயக்கப்பட்டு தான் வருகிறது. ஆனால் வறட்சி தொடர்ந்தால், நீர்மட்டம் குறைந்தால் சூழல் சுற்றுலா பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றார். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பரளிக்காடு சூழல் சுற்றுலா முடங்கும் நிலை உள்ளது. அப்படி நடந்தால் பழங்குடியின மக்கள் பாதிக்காமல் இருக்க உதவி தொகை வழங்க வேண்டும்' என்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ