ஆனைமலை:'வாசிப்பே குழந்தைகளின் வாழ்வியலை வளமாக்கும்,' என, பொள்ளாச்சி அருகே பள்ளியில் நடந்தஉலக புத்தக தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.ஆனைமலை அருகே, பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், உலக புத்தக தினத்தை முன்னிட்டு, 'பள்ளியில் ஒன்றினைவோம், வாசிப்போம்' என்ற தலைப்பில், புத்தக வாசிப்பு நிகழ்வு நடந்தது. தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார்.உலக புத்தக தினத்துக்காக, சமூக ஊடகங்களில் பள்ளியின் தமிழாசிரியர் பாலமுருகன், புத்தக தானம் கேட்டார்; அதற்கு பலரும் ஆயிரம் பழைய மற்றும் புதிய புத்தகங்கள் தானமாக வழங்கினர்.இந்த புத்தகங்கள் பள்ளியில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. அதில், விருப்பப்பட்ட புத்தகங்களை எடுத்து, ஒரு மணி நேரம் குழந்தைகளை வாசிக்க வைத்தனர்.புத்தகங்கள் எதற்காக வாசிக்க வேண்டும் என்ற தலைப்பில், பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவர் மற்றும் பள்ளியில் செயல்படும் வாகை வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான அம்சபிரியா, குழந்தைகளுடன் உரையாடினார்.அவர் பேசுகையில், ''வாசிப்பின் வாயிலாக குழந்தைகளின் மனதில், நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள் உருவாகும். அதற்காகவே இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.புத்தக வாசிப்பே குழந்தைகளின் வாழ்வியலை வளமாக்கும். புதிய சிந்தனைகள், தனித்திறன்களை உருவாக்கும். மனம் அமைதி அடைவதுடன், மனநிலை ஒருநிலைப்படும். சிறந்த பண்பாளர்களாக்கும். அதனால், குழந்தைகள் மனதில் வாசிக்கும் பழக்கத்தை விதைப்போம்,'' என்றார்.தொடர்ந்து அவருடன், வாசித்தது குறித்து மாணவர்கள் ஒரு மணி நேரம் கலந்துரையாடினார். தமிழ் ஆசிரியர், புத்தக தானம் வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, வாசிப்பே குழந்தைகளின் வாழ்வியலை வளமாக்கும் எனக்கூறினார்.