வால்பாறை;மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் வண்ணமயமான வனவிலங்குகளின் படம் வைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாபயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கோவை மாவட்டம், கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள சோலையாறு அணை, பாலாஜி கோவில், நீர்வீழ்ச்சிகள், ஆறுகளை ரசிக்க தினமும், பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறையில், அரிய வகை வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன.குறிப்பாக வரையாடு, சிங்கவால்குரங்கு, யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இது தவிர, எண்ணற்ற பறவைகளும் காணப்படுகின்றன.இந்நிலையில், வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் வந்து செல்கின்றனர். வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை ரோட்டில், நடமாடும் வனவிலங்குகளையும் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆழியாறில் இருந்து வால்பாறை வரும் வரையிலான, 40 கொண்டை ஊசி வளைவுகளிலும், அரிய வகை வனவிலங்குகள், பறவைகள் பெயர் சூட்டப்பட்டுள்ளன.சுற்றுலாப்பயணியரை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பர பதாகை, இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:இயற்கையையும், வனவிலங்குகளையும் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.வால்பாறைக்கு வரும் சுற்றுலாபயணிகளை மகிழ்விக்கும் வகையிலும், அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், 40 கொண்டை ஊசி வளைவுகளிலும், வனவிலங்குகளின் படம் வைக்கப்பட்டுள்ளது.வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் இருபுறமும் உள்ள முட்புதர்கள் வெட்டப்பட்டுள்ளன. மலைப்பாதையில் வைக்கப்பட்டுள்ள குவிக்கண்ணாடிகளால், சமீப காலமாக விபத்துக்கள் வெகுவாக குறைந்துள்ளன. இவ்வாறு, தெரிவித்தனர். வால்பாறை வரும் மக்களுக்கு, இந்த வனவிலங்குகள் விழிப்புணர்வு படங்கள் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.