| ADDED : பிப் 09, 2024 11:04 PM
மேட்டுப்பாளையம்:காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேர் சுத்தம் செய்யும் பணிகள் துவங்கின.கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் மாசிமகத் தேர்த் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும், வெகு விமரிசையாக நடத்தப்படும். நடப்பாண்டு மாசி மகத் தேர்த்திருவிழா வரும், 17ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்குகிறது; 18ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. வரும் 22ம் தேதி காலை பெட்டத்தம்மன் அழைப்பும், 23ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு திருக்கல்யாண வைபமும் நடக்கிறது. 24ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை 4:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேர் திருவிழா முடிந்த பின், தேர் பாதுகாப்பு நலன் கருதி, சுற்றிலும் தகர சீட்டால் பாதுகாப்பு செய்யப்படும். இந்தாண்டு தேர்த் திருவிழாவை முன்னிட்டு, தேரை சுத்தம் செய்ய, சுற்றியுள்ள தகரங்களை அகற்றும் பணிகள் துவங்கின.நேற்று காலை, தேருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தேரை சுற்றியுள்ள, பாதுகாப்பு தகரங்களை பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.