உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து திடீரென வெளியே வரும் பஸ்கள்; விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை தேவை

 உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து திடீரென வெளியே வரும் பஸ்கள்; விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை தேவை

கோவை: தமிழகத்திலேயே கோவையில்தான், அதிக சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. உயிர் பலி ஏற்படுவதிலும் முதலிடம் என்கிறது, போலீசார் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம். வாகன பெருக்கத்துக்கு ஏற்ப, கோவை நகர் பகுதியில் உள்கட்டமைப்பு, சாலை வசதி மேம்படுத்தப்படாமல் இருப்பதும் விபத்து அதிகரிக்க ஒரு காரணம். உக்கடம் சந்திப்பில் இருந்து வாலாங்குளம் பைபாஸில் செல்லும் வாகன ஓட்டிகள், பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து வெளியேறும் பஸ்கள் தெரியாமல் தடுமாற்றம் அடைகின்றனர். அப்பகுதியை கடக்கும்போது, பஸ் ஸ்டாண்ட் பக்கம் முகத்தை திருப்பி, பஸ்கள் வருகின்றனவா என பார்த்து விட்டு, கவனமாக செல்ல வேண்டியிருக்கிறது. உக்கடத்தில் மேம்பாலம் கட்டியபோது, சந்திப்பில் இருந்து மையத்தடுப்பு கட்டப்பட்டது. அப்போது, பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து வெளியேறும் பஸ்களுக்காக, மையத்தடுப்பில் இடைவெளி விடப்பட்டது. இதன் காரணமாக, உக்கடம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள், பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து வரும் வாகனங்கள், சுங்கத்தில் இருந்து வரும் வாகனங்கள், இப்பகுதியில் திரும்பும்போது, ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ள வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கக் கூடிய சூழல் இருக்கிறது. இந்த இடம், 'பிளைண்ட் ஸ்பாட்' என அறியப்பட்டுள்ளதால், அவ்விடத்தில் ரவுண்டானா அமைக்கலாமா என நெடுஞ்சாலைத்துறையும், மாநகராட்சியும் ஆலோசித்தன. அப்பணியை, மாநகராட்சி செலவில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. உக்கடம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி முடியும்போது, வெளியேறும் பகுதி எந்த இடத்தில் அமையுமோ அங்கு ரவுண்டானா அமைக்கலாம் என நினைத்து, மாநகராட்சியும் கிடப்பில் போட்டு விட்டது. தற்போது வரை மையத்தடுப்பில் இடைவெளி காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் தினமும் அச்சத்துடன் அவ்வழியை கடந்து செல்கின்றனர். விபத்தை தவிர்க்க மையத்தடுப்பை அடைக்க வேண்டும் அல்லது பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து பஸ்கள் வெளியேறும் பகுதியை அளந்து, ரவுண்டானா அமைக்க வேண்டும். விபத்து ஏற்பட்டு, உயிர் பலி ஏற்படும் முன் இதை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ