| ADDED : டிச 06, 2025 05:31 AM
உடுமலை: கிராம சாலைகள் பராமரிப்பை நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளாததால், செல்லப்பம்பாளையம் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடுமலை ஒன்றியம், தேவனுார்புதுாரில் இருந்து செல்லப்பம்பாளையம் செல்ல கிராம இணைப்பு சாலை உள்ளது. இவ்வழித்தடத்தை சுற்றுப்பகுதியைச்சேர்ந்த, 10க்கும் அதிகமான கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியிலுள்ள தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்களும் இவ்வழியாகவே செல்ல வேண்டும். பல ஆண்டுகளாக இந்த ரோடு பராமரிக்கப்படவில்லை. குண்டும், குழியுமாக மாறி, தொடர் மழைக்கு பிறகு, ரோடே காணாமல் போயுள்ளது. இருசக்கர வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாமல், பல கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. அவ்வழியாக வாகனங்கள் செல்லாமல், போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை தற்போது உள்ளது. ஆனால், உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தினர் ரோடு பராமரிப்பை கண்டுகொள்ளவில்லை. இதனால், அதிருப்தியில் உள்ள தேவனுார்புதுார், செல்லப்பம்பாளையம் சுற்றுப்பகுதி கிராம மக்கள் ரோட்டை புதுப்பிக்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.